மதுரை: அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன், என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அதில், அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெறுவது இல்லை என்றும், பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்றி துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர். இதுபோன்ற குறைகளால்தான் மறுபிரேத பரிசோதனை செய்தல், குற்றவாளிகள் தப்பித்தல், வீடியோ காட்சி பதிவு செய்தல் போன்றவை தேவைப்படுகிறது.
எனவே, அனைத்து பிரேத பரிசோதனை அறைகளிலும் வீடியோ கேமரா பொருத்தவும், விஞ்ஞான அலுவலர்களை பணிக்கு நியமிக்கவும், இவர்கள் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை தயாரித்து, வீடியோ காட்சிகளுடன் அன்றைய தினமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை அறையில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று 2008ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், அதனை அறிக்கையின் ஒரு பகுதியாக வழங்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரேத பரிசோதனைகள் நீதிமன்றம் உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படுகிறதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை செயலர், ஏப். 9ம்(இன்று) தேதி தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து பிரேத பரிசோதனைகளையும் வீடியோ பதிவு செய்வது சாத்தியமற்றது என்று தமிழக அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேக மரணங்களின் பிரேத பரிசோதனையை மட்டும் வீடியோ பதிவு செய்ய முடியும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி